திங்கள், 27 ஜனவரி, 2014

தாயுமானவன்!-1

நாங்கள் ஐந்து பிள்ளைகள், பதினோரு வயது என் அக்கா, ஒன்பது மற்றும் ஐந்து வயதில் இரண்டு அண்ணன்கள், மூன்று வயதில் நான், மற்றும் ஒன்றரை வயதில் என் தம்பி, என் அம்மா இந்த உலகத்தை விட்டு சென்ற பொழுது. ஒரே நாள் வாந்தி மயக்கம், ஜீரம் என ஆஸ்பத்திரி போனவர், மறு நாள் திரும்ப பிணமாகத்தான் வந்தார்கள். காலனுக்கு காரணம் தேவை இல்லையே.

என் அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள், எங்களை பார்த்து கதறி அழுததாக அக்கா சொல்வார்கள். அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. என் அப்பா, நாங்கள் சிறு வயதில் இருக்கையில் திருமணம் செய்தால், மறுதாரம் எங்களை கொடுமைபடுத்தினால் என்ன செய்வது என நாங்கள் வளரும் வரை (பத்து வருடம் கழித்து திருமணம் செய்தார்) மறுமணம் செய்யவில்லை. ஐயாவிடம் ரொம்ப மரியாதை, நேரே உக்காந்து நான் பேசியதே இல்லை.

அப்பா, IAS தேர்வில் முதல் கட்டம், தேர்வாகி முக்கிய தேர்வில் தேர்வாகவில்லை(அப்பா எங்களிடம் இது வரை காட்டி கொண்டதே இல்லை), ரொம்ப அறிவாளி என தாத்தா சொல்வார்

அப்பாவுக்கு, திருக்குறள் மேல் உள்ள அவர் ஆர்வம் என்னை வியக்க வைக்கும்.

தாத்தா அவரை சட்டம் படிக்க வைத்தார். என் அப்பா உயர் நீதிமன்ற வேலையாக சென்னை செல்வார், திரும்ப வந்ததும் என்ன வாங்கி வந்து இருக்கிறார் என ஆர்வமாக பெட்டியை பார்த்தால், புத்தமாக நிறைந்து இருக்கும். எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்கும். அப்பாவுக்கு, புத்தகம் என்றால் கொள்ளை பிரியம்.

திருப்புகழ்
தேவாராம்
சுய முன்னேற்ற புத்தகங்கள்
அறிவியல் ஆராய்ச்சி
நபிகளின் பொன் மொழிகள்
ஏசுபிரானின் பொன்மொழிகள்
சித்த வைத்தியம்
கை வைத்தியம்

என எல்லா பிரிவுகளிலும் புத்தகம் அடுக்கி இருக்கும். எங்கள் வீட்டு வரவேற்பறையில், சிறிய புத்தக நிலையமே இருக்கிறது. எங்களை அடிக்கடி "படிங்க..படிங்க "என்பார்..இம்கும்..நாங்கெல்லாம் இப்பயே அப்படி...அப்ப கேக்கவா வேணும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொழுது சிறிது படிப்பேன்.

மதம் தாண்டி அவர் எண்ணங்கள் இருக்கும், நபிகளின் பொன்மொழிகள் என்னை மிகவும் கவர்ந்தவை,

"கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்."

"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது."

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்."

"குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்."

" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்."

"தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது."

இவையெல்லாம் என் தந்தை, புத்தகம் மூலமாக எனக்கு கற்று கொடுத்தவை.

எனக்கு பிடித்த ஏசுபிரானின் பொன்மொழிகள்,

"உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்."

" உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

" மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்."

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்." - என்னை சிந்திக்க வைத்த பொன்மொழிகள்

அப்பா மூன்று மணி நேரம் கூட தூங்க மாட்டார். எப்பொழுதும் படித்து கொண்டே இருப்பார். "கற்றது கை மண் அளவு ..கல்லாதது உலக அளவு" என்பார்.

நீங்கள், உங்கள் பிள்ளைக்கு அளிக்கும் மிக உயர்ந்த பரிசு, ஒரு நல்ல புத்தகமாக இருக்கட்டும். காலத்திற்கும் அழியாத பரிசாகவே இருக்கும்.

நான் படித்த அதே புத்தகம் நாளை என் மகள் படிப்பாள். தலைமுறை தொடரும்.

இரவல் கொடுத்த நிறைய புத்தகம் திரும்ப வரவில்லை.

நீங்கள் ஒரு புத்தக பிரியர் எனில், புத்தகம் மட்டும் இரவல் கொடுத்தால், உடனே  வாங்கி விடுங்கள். இல்லை எனில், சாதுர்யமாக  தவிர்த்து விடுங்கள். வீட்டிலே வந்து படித்துவிட்டு போக சொல்லுங்கள்.

தாயுமானவன்!

தூக்கம் மறந்த வேளையிலே..
கதை..சொல்லி..தூங்க வைத்தான்..
அவன் தாயும்... அல்ல..

கைபிடித்து ..
வழி நடத்தினான்..
அவன் என் பாதுகாவலனும் அல்ல..

படிக்க மறந்த வேளையிலே..
கல்வி கற்று கொடுத்தான்..
அவன் என் ஆசானும் அல்ல..

கஷ்டம் வந்த வேளையிலே..
கை கொடுக்க ஓடி வந்தான்..
அவன் கடவுளும் அல்ல..

கடைசிவரை நான் இருக்கேன் என்றான்
என் காதலனோ.. கணவனோ..அல்ல..

அவன் எல்லாவற்றிற்கும் மேலானவன்..
என் தகப்பன்... அவன் எனக்கு தாயுமானவன்..

அப்பாவை ஐய்யா என அழைக்க சொல்லி எங்க அம்மா சொன்னதாக அக்கா சொல்வார். இன்றும் ஐய்யா என்று தான் அழைப்போம்.

ஐயா உங்களுக்கான பதிவு இது

I MISS YOU AYYA!

அக்கா, நீ ஊருக்கு போகும்போது அய்யாவுக்கு, இந்த பதிவை காட்ட வேண்டும்.

4 கருத்துகள்: